Quantcast
Channel: மழைக்கு ஒதுங்கியவை...
Viewing all 28 articles
Browse latest View live

நத்தை (பாகம்-2)

$
0
0
"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.."

*******************

கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது.இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா? அதெல்லாம் பேசிக்கிர‌லாம் ம‌ச்சான்.ஒத்துக்கிருவாஹ..ப‌டிக்கிற புள்ள‌ய‌ நாம ஏன் த‌டுக்க‌..! ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.அந்த‌ க‌ம்பியூட்ட‌ர் என்ஜினிய‌ர் வீட்டையும் சேர்த்து.

அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது.சினிமால வர மாதிரி இழுத்துக்கிட்டா ஓடமுடியும்.ஓடுறது ஒருபக்கம் இருக்கட்டும்.அதுக்கு இந்த அழுக்கு குத்து என்ன மனசுல நெனச்சிருக்கோன்னு யாருக்கு தெரியும்.சரி இன்னும் ரெண்டு வருசம் இருக்குல்ல..நீ அழுவாத‌! ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!

கமுதி,முதுகுளத்தூர்,சிக்கலூர் சனம் முழுவதும் அவ‌ள் வீட்டில் நிரம்பி வழிய,அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.எம்.எஸ் வீட்டு நிகழ்ச்சின்னா சும்மாவா..பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.இந்த சின்ன நிகழ்ச்சிக்கே, சுந்தரபுரத்து தெரு முழுதையும்,கீழக்கரை டாட்டா சுமோக்கள் நிறைத்திருந்தன.ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.நண்டு,சுண்டு முதல் அந்த கீழக்கரை குடும்பத்து பெரியவர்கள் மீது வரை வீசிய‌ அத்தர் வாடை அவளுக்கு குமட்டத் தொடங்கியது.காட்டுமல்லி மணமும் பட்டுப்புடவைகளும்,தரைதொடுமளவு தங்க நகைகளும் ஒப்பவில்லை.வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.

வந்த சனம் முழுதும் வெற்றிலைகளையும் தேங்காய்களையும் சேலையில் முடிந்து கொண்டு,அவள் நெற்றியைத் தடவி "கொடுத்து வச்ச மவராசி"க்களை வாரி வழங்கி விட்டு நகரத் துவங்கியிருந்தது.வாப்பாவும் அம்மாவும் பூரிப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சஹ்ரானி மாமா சமையல்,பந்தல்,சேர்க்காரனுக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருந்தார்.கனமான சீமைச் சில்க்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு,மீண்டும் பழைய பூப்போட்ட கத்தரிப்பூ தாவணிக்கே மாறினாள்.என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.

மதியந்தே இந்த கொள்ள கூக்கறையில சரியா சோறுண்டுருக்க மாட்ட.இப்பவாவது ஒலுங்கா தின்னுளா! அம்மா கத்தியது காதில் விழவேயில்லை.மனம் என்னவோ சொரட்டுபுள் திண்ணையையும்,கேபிள்காரனையுமே சில்லுவண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.

ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.கொலுசுகளை கழற்றி வைத்தாள்.கொள்ளைப்புற கதவை சத்தமில்லாமல் திறந்தாள்.பாவாடையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.கிணற்றுத் திண்டில் கால்வைத்து ஏறி,சுவர்களை பற்றிக் கொண்டு பின் தெருவில் குதித்தாள்.சுண்ணாம்பு வீடுக‌ளைத் தாங்கிய‌ சொர‌ட்டுபுள் தெரு வெறிச் சோடிப் போயிருந்தது.விறுவிறுன்று அவன் வழக்கமாக தூங்கும் ப‌ழ‌ந்திண்ணையை நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினாள்.

கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.உத‌டுக‌ள் துடிதுடிக்க‌ அவன் முகத்தைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் அவளுக்கு அழுகை வெடிக்க ஆரம்பித்தது.என்ன‌ எங்கியாவ‌து க‌ண் காணாத‌ எட‌த்துக்கு கூட்டிட்டு போயேண்டா!!! ஓவென்று க‌த‌ற‌த் துவ‌ங்கினாள்.இடி இடித்தாற் போல் அலறிக் கொண்டு எழுந்தான் ஊனாமூனா.க‌ண்களாலேயே விழுங்குப‌வ‌ள் போல‌ அவ‌ன் முக‌த்தையே அவ‌ள் வெறித்துக் கொண்டிருக்க,திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

***************முற்றும்***************

கறுப்பு தினம்

$
0
0


நம்பர் ஃபிளைட்ல அடுத்த மாசம் பதினோராம் தேதி உனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிருக்கு.நீ வெர்ஜினியால பத்தாம் தேதி இருக்கணும்.இந்த நம்பர MS Word-ல காப்பி பேஸ்ட் பண்ணி, Wingdings Font ஸ்டைல்ல‌ மாத்திப்பாரு..நாம முடிக்க வேண்டிய ஆபரேஷனோட சீக்ரெட் கோட் இந்த நம்பர்ல ஒளிஞ்சிருக்கு.

ஹட்டா
(வஸ்ஸ...)


என்னுடைய ப்ளாக்பெர்ரியில் ஹட்டாவின் குறுந்தகவல் அதிர்ந்தது.ஹட்டா இஸ் ரியலி எ ஜீனியஸ் !


****************************

தடிமனான‌ திரைச்சீலைகளுக்குள் எங்களுடைய இரவு கிடத்தப்பட்டு,அறை முழுதும் நிசப்தம் பரவியிருந்தது.நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை.ஹட்டா மட்டும் வழக்கம் போல தன்னுடைய மடிக்கணினியில் மைக்ரோசாஃப்ட் ஃப்ளைட் சிமுலேட்டர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஹட்டாவை நான் ஆப்கனில் பயிற்சியின் போது தான் முதன் முதலாக‌ சந்தித்தேன்.ஹம்பர்கில் எம்.எஸ் படித்தவன்.எகிப்திய‌ர்க‌ளுக்கே உரித்தான‌ ர‌த்த‌ச் சிவ‌ப்பு நிறம். அமைதியான முகம். இன்னும் ஒருமாதத்தில் நாங்கள் நிறைவேற்றப்போகும் இந்த மிஷனுக்காக குழுத்தலைவர் காலித்,என்னையும் அட்டாவையும் தேர்ந்தெடுத்து,போலி ஆவணங்கள் தயார் செய்து பி1/பி2 டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தார். நான்கைந்து மாதங்கள் அலைந்து திரிந்து, கடைசியாக தெற்கு ஃப்ளோரிடாவில் இருக்கும் ஹஃப்மேன் ஏவியேஷனில் "பைலட் ப்ரோகிராம்" சேர்ந்தோம்.மூன்று மாதங்களில் விமானத்தின் நுணுக்கங்களையும் செயல்திறனையும் திறம்பட கற்றுத் தேர்ந்தோம்.நவம்பரில் "இண்ஸ்ட்ருமன்ட் ரேட்டிங்" பாஸ் செய்து விட்டோம்.

************

ஹட்டா வார்த்தைகளை அதிகம் செலவழிக்க மாட்டான்.எப்போதாவது மனம் உடைந்து அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.

ஒருமுறை ஆப்கன் பயிற்சியின் போது,ஒரு மாலைநேரம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லாத அந்த சிறுவர்களைப் பார்க்க ஏக்கமாக இருந்தது.

அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் அஜ்மல் என்ற சிறுவனும் இருந்தான்.அஜ்மலுக்கு அப்போது 12 வயது தான் இருக்கும்.பயிற்சியின் போது எங்களுக்கு சாப்பாடு வாங்கி வருவது, கடைக்கு போவது போன்ற உதவிகள் செய்வான். சிறுவர்களாக இருந்தால் முதல் மூன்று வருடங்களுக்கு எடுபிடி வேலைகள் தான் கொடுக்கப்படும். அதன் பிறகு தான் மற்ற எல்லாம்.7 வருடங்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு ஸ்லீப்பர்களாக இந்திய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அஜ்மல் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன்.

அன்று அஜ்மல் மட்டும் சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து ம‌றைந்த‌து.ஹட்டா, இமை கொட்டாமல் சிறுவனையும் மரத்தில் மோதும் நீர்க்குமிழிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து,ச‌ரியாக‌ மூன்று மாத‌த்தில் எங்க‌ளுடைய‌ மிஷ‌னுக்கான‌ 'பிளாட்' அட்டாவால் தீர்மானிக்க‌ப்பட்ட‌து.

********************************

டேம்பா பகுதி அபார்ட்மென்ட் ஒன்றில் எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன. இந்த‌ தீராத‌ ப‌ய‌மும் ந‌டுக்க‌மும் எங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌வில்லை.

ந‌ள்ளிர‌வுக‌ளில் ஹட்டா போர்வைக்குள் க‌தறி அழுவது ம‌ட்டும் மெலிதாக‌ கேட்கும். இந்த ஆப‌ரேஷ‌னிலிருந்து பின் வாங்கி விட‌லாமா என்று கூட‌த் தோன்றும். ஆறேழு வ‌ருட‌ உழைப்பு,திட்ட‌ம் எல்லாம் பாழாகினாலும் ப‌ரவாயில்லை.எல்லாவ‌ற்றையும் துர‌ எறிந்து விட்டு,ஊருக்கே திரும்பி ப‌ழைய‌ வாழ்க்கையை ஆர‌ம்பிக்க‌லாம். என‌க்காக‌ அவ‌ள் காத்து கொண்டிருப்பாள் என்றெல்லாம் ம‌ன‌துக்குள் பேசி ச‌ண்டை போட்டு மீண்டும் ஃப்ளைட் சிமுலேட்ட‌ர்க‌ளை இய‌க்க‌ ஆர‌ம்பித்து விடுவோம்.லாஸ் வேகாஸ் சென்று லாப் டான்ஸ் பார்த்தோம். ஸ்காட்ச்சிலும் ஷாம்பைனில் மூழ்கித் திளைத்தோம்.

*************************

நான் வெர்ஜினீயாவிலிருந்தும், ஹ‌ட்டா பாஸ்ட‌னிலிருந்தும் கிள‌ம்பி விட்டோம்.எதிர் எதிர் திசையில் நியூயார்க்கில் வானில் ச‌ந்திப்ப‌தாய் திட்ட‌ம். முத‌ல் க‌ட்டிட‌ம் ஹ‌ட்டாவின் இல‌க்கு. இர‌ண்டாவ‌து க‌ட்டிட‌ம் என்னுடைய‌து.

ச‌ரியாக ஏழு வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அஜ்மல் (எ) அமீர் க‌ச‌வ், சோப்பு நீரில் முட்டை விட்ட‌ அதே சிறுவன் த‌ன் ச‌க‌ கிரிக்கெட் கூட்டாளிக‌ளுட‌ன் உல‌ர்ந்த‌ பேரித்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை பையில் வைத்து கொண்டு,கராச்சி துறைமுக‌த்திலிருந்து மும்பையை நோக்கி கிள‌ம்புவான்.

***********************

சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்

$
0
0
சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

இங்கேசொடுக்குக‌ !

அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)

அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

1) செவ்வாழைஅண்ணாதுரை
2) ந‌க‌ர‌ம்சுஜாதா
3) தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌ சுஜாதா
4) பாட்டையாமேலாண்மை பொன்னுச்சாமி
5) பாய‌ம்மாபிர‌ப‌ஞ்ச‌ன்
6) புய‌ல்அகில‌ன்
7) பொம்மைஜெய‌காந்தன்
8) க‌த‌வுகி.ரா
9) இன்னும் கிளிக‌ள்மாத‌வ‌ராஜ்
10) ஐந்தில் நான்குநாஞ்சில் நாட‌ன்
11) குற‌ட்டை ஒலிடாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்
12) கால்க‌ள்சுஜாதா
13) இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
14) ந‌ட‌ந்து செல்லும் நீருற்றுஎஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
15) சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ ஆத‌வ‌ன்
16) ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள்ஆத‌வ‌ன்
17) பீங்கான் நாரைக‌ள்எஸ்.ராமகிருஷ்ண‌ன்
18) ம‌ண்குட‌ம்மாத‌வ‌ராஜ்
19) த‌வ‌ம்அய்க்க‌ண்
20) ப‌ல்லிமெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்
21) ஸார் நாம‌ போயாக‌ணும்ச‌த்ய‌ராஜ்குமார்

இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.

கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.

***********

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று

$
0
0



எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையை



பெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்



நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்



இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்



நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை



உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை



முதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்



சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************

இன்னுமொரு நாடகம் (சிறுகதை)

$
0
0
மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.

படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.

ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.

புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர் காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.

எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.

ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.

( மீதி விரைவில்..)

************************************************

இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)

$
0
0
முத‌ல் பாக‌ம்


*******************பாகம்-2**************************************

ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவ‌ள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில் மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக‌ அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான‌ பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க‌ எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.

ம‌றுநாள் ச‌னிக்கிழ‌மை காலை 10 ம‌ணிக்கு தொட‌ங்கவிருந்த‌ ஒத்திகை,மேரி வ‌ராத‌தால் தாம‌த‌மான‌து.சிறிது நேர‌ம் க‌ழித்து,சி செக்ஷன் சும‌தி வ‌ந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அத‌ன் பிற‌கு,சுமார் மூஞ்சி சும‌தியே ஜூலிய‌ட்டாக ந‌டிப்ப‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ஹேம‌ந்த் பாபு ஏமாந்த‌ பாபுவானான்.அற்ப‌ ச‌ந்தோஷ‌த்தில் நான் மெலிதாக‌ சிரித்த‌து மேரிக்கு கூட‌ கேட்டிருக்கும்.

ஒரு வார‌ம் மேரி ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை.இருப்பு கொள்ளாம‌ல் சைக்கிளின் முன் க‌ம்பியில் அந்தோணி சாமியை கிட‌த்திக் கொண்டு நாலைந்து நாட்க‌ள் அவ‌ள் வீட்டின‌ருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக‌ நான்காவ‌து நாள் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து கொண்டு, வாச‌லில் க‌றிகாய் வாங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ள் அம்மாவிட‌ம் மேரி வ‌ராத‌தை ப‌ற்றி விசாரித்தேன்.கார‌ணத்திற்கு அவ‌ள் என்னிட‌ம் வாங்கியிருந்த‌ புவியிய‌ல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடிய‌லை என்றும் இர‌ண்டொரு நாளில் ப‌ள்ளிக்கு வ‌ந்து விடுவ‌தாக‌வும் ஆன்ட்டி சொன்னார்க‌ள்.பிற‌கு என்ன‌ நினைத்தார்க‌ளோ.ஒரு நிமிஷ‌ம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு க‌ன‌த்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ம‌றைந்த‌து.ஒரு வேளை நான் அணிந்திருந்த‌ குவிஆடி சைஸை பார்த்து ந‌ம்பியிருக்க‌க்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாச‌லிலேயே இருத்தி விட்டு, நான் ம‌ட்டும் வ‌ராண்டாவிலிருந்த‌ சேரில் காத்திருந்தேன்.சிறிது நேர‌த்தில் பான்ஸ் ப‌வுட‌ருட‌ன் க‌ல‌ந்த ம‌ல்லிகை ம‌ண‌ம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவ‌ணிப் பெண். ம‌ங்கிய‌ வெளிச்ச‌த்தில் நான் க‌ண்ட அந்த உருவம் வாழ்நாளில் ம‌ற‌க்க‌வே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌ம்,புதிதாய் வெட்க‌ம்,லேசான‌ த‌ய‌க்க‌ம்,குறுகிய‌ இடைவெளி விட்டு ந‌டை, விம்மிப்பூரித்த‌...ச‌ரி வேண்டாம். ஒரு பெண்மையின் ப‌ரிபூர‌ண‌ ஸ்ப‌ரிச‌த்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த‌ ம‌ல்லிகைப்பூ வாடை அருகில் வ‌ர‌ வர க‌ண்க‌ள் சுர‌ந்து விட்ட‌து.நான் இதுவ‌ரை பார்த்திராத‌ மேரி.

ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய‌ திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.

'உன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு அம்மா சொன்னாங்களே'.

'நாந்தான் புவியிய‌ல் புக்க போன‌ வார‌மே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.

அந்த‌ வ‌ருட‌ம் முழுதும் நாள் த‌வ‌றாம‌ல் இதே கேள்வியை என்னிட‌ம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க‌ முடியாம‌ல் ஒருநாள் Mercy twice blessed நாட‌க‌ம் முடிந்து கொட்டும் ம‌ழையின் பின்ன‌ணி இசையில் அவ‌ளிட‌ம் உண்மையை ஒப்புக்கொண்டேன்.

அப்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் ம‌றுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்ன‌கைத்த‌து செய‌ற்கையாக‌ இருந்த‌து.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் என்று அடுத்த‌டுத்த‌ நாடக‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டாள்.அத‌ன் பிறகு ஒரேயொரு முறை சூசைய‌ப்ப‌ர் ந‌வ‌நாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட‌ மரியாயே.ச‌ர்வேசுவே மாதாவே" என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.

கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி ம‌கேஸ்வ‌ரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் த‌ட‌ம் அழித்து, பிராக்டிக‌ல் எக்ஸாம் காலைய‌ன்று ரெகார்ட் ச‌ப்மிட் ப‌ண்ணி,ஒருவ‌ழியாக‌ கேம்ப‌ஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.

அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த‌ த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌த்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெய‌ரைத் தேடி கையெழுத்து போட‌ முனைந்த‌ போது, ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான‌ கை. திரும்பினால் லிட்டில் ஃபிள‌வர் மிஸ்.எப்ப‌டிடா இருக்க‌..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்ன‌டா ப‌ண்ற‌..எத்தன‌ வ‌ருஷ‌மாச்சுல‌ருந்து ஆரம்பித்து அம‌லோற்ப‌ம் பிரின்ஸி ரிடைய‌ர்ட் ஆன‌து வ‌ரை சொல்லி முடித்தார்க‌ள்.

வித‌விதமான‌ வ‌ண்ண‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட எங்க‌ள் நாட‌க‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன.க‌ண்க‌ள் விரிய‌ பார்த்துக் கொண்டிருந்தோம். க‌ட‌வுள் உன்ன‌ எப்ப‌டி ஆசிர்வ‌திச்சிருக்கார் பாரு !! நீ ந‌ல்லா வ‌ருவ‌ன்னு அப்ப‌வே தெரியும். என்ற‌ அவ‌ர்க‌ளின் அன்பின் வார்த்தைக‌ளில் நெகிழ்ந்து நின்ற‌ போது தான் அந்த‌ அறையின் இட‌து ஓர‌த்தில் அந்த‌ புவியிய‌ல் புத்த‌க‌ம் த‌ட்டுப்பட்ட‌து.க‌டைசி ப‌க்க‌த்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு ம‌ங்க‌லாக‌ எழுத‌ப்பட்டிருந்த‌ என் பெய‌ர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.


(முற்றும்)

*******************************

வலைச்சர வாரம்

$
0
0
அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.

இணைந்திருங்கள் !!!

இன்றைய வலைச்சர அறிமுகப்பதிவு

**********

ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு

$
0
0
ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ்கதைக்கான என்னுடைய முடிவு:

************

மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.

அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.

கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.

ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.

திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.

திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.

பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!

"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.


**************

நெருப்பாலான‌ ஜின்கள்

$
0
0

நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.

இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.

நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.

"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"

முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.

அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.

லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.

"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.



நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?

அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.

"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"

போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .

ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?

அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.

இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.

"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"

வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.

"குல்பி ஐஸ்? "

குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.

"ஹைய்!"

சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

*********************

மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.

வழக்குச் சொற்கள்: க‌ராமத், குத்ற‌த்து‍‍‍---பராக்கிர‌ம‌ங்க‌ள்; அச‌ர்த்து---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); ந‌ன்னா,ந‌ன்னி‍‍--தாத்தா பாட்டி; ம‌த‌ர‌ஸா--இஸ்லாமிய பாட‌சாலை;ம‌ய்ய‌த்து--பிண‌ம்.

****

நன்றி: உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009)


------------------------------------

மீன‌ம்பாக்க‌ம் கிடைக்காத‌தால் திரிசூல‌ம்

$
0
0

நெடுநேர ரயில் பயணங்களின் அயர்ச்சியை துரத்தியடிப்பதற்காகவும் நேரத்தை கொல்வதற்காகவும் ஒன்றிரண்டு புத்தகங்களை துணைக்கு அழைத்துச் செல்வதும்,வழிநெடுகிலும் சுவாரஸியமான மனிதர்கள் நிறைய
வாசிக்கக் கிடைப்பதால் அவை பெரும்பாலும் பையிலேயே உறங்கி விடுவதும் வாடிக்கையாகி விட்ட‌து.

விமானம்,கூபேக்களின் குளிர்ச்சியை விட,மத்தியதர வர்க்கத்தின் இரண்டாம் வகுப்பு வெம்மை இத‌மாக‌ இருந்திருக்கிற‌து.சிறுவயதில் வெவ்வேறு ஊர் எல்லைக‌ளின் ச‌ந்திப்பை நெருங்கும் போது ச‌ன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து பெயர் பலகை வாசித்து இன்ன‌ ஊர் என்று அம்மாவுக்கு தெரியப்படுத்துவதில் மெக்க‌ல்ல‌னின் ப‌ர‌வ‌ச‌ம் அட‌ங்கியிருந்த‌து.இப்போதெல்லாம் ச‌த்த‌மாக‌ வாய் விட்டு சொல்ல‌ முடியாவிட்டாலும் என‌க்குள்ளே மெள‌ன‌மாக இது குல்பர்கா இது அரக்கோணம் என அறிவித்து கொள்கிறேன்.

பின்னோக்கி ந‌க‌ரும் உல‌க‌ம்,ம‌னித‌ர்க‌ள்,தொழிற்சாலைகள்,வயல் வரப்புகள்,கரும்புக்காடுகள்,சவுக்கு மரங்கள்,சூரியகாந்திப் பூக்கள்,ப‌ச்சை ஆடை ம‌லைக்குன்றுக‌ள்,தூர தேசத்து ப‌றவைக‌ள்,சிறிய‌ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள்,மெல்லிய‌ ஒலியெழுப்பி தூர‌த்தில் க‌ட‌ந்து செல்லும் விமான‌ங்க‌ள்,ம‌லைக‌ளுக்குள் ஒளிந்து க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம் ஆடும் மேக‌ங்கள்,வானவில்,மழைத்துளி அனைத்தையும் நீல நிற பின்னணியில் த‌ன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விஸ்தார‌மான‌ வானம்,எல்லாவ‌ற்றையும் ர‌சிப்ப‌த‌ற்கு சுடச்சுட‌ தேநீர் என்று ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ள் த‌ரும் அனுபவ‌ங்கள் பேசி பேசித் தீராது.

நாட்களை விழுங்கும் எக்ஸ்பிர‌ஸ் ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ளை விட‌,சென்னையின் அரை ம‌ணி நேர‌ மின்சார‌ ர‌யில் ப‌ய‌ண‌ நினைவுக‌ள் இன்னும் ப‌சுமையாக‌ இருக்கின்ற‌ன‌.சென்னை க‌ட‌ற்க‌ரையிலிருந்து வேளச்சேரி ம‌ற்றும் தாம்ப‌ர‌ம் மார்க்க‌ம் நான் அதிக‌ம் புழ‌ங்கிய‌ இட‌ம். புத்த‌க‌ங்க‌ளும் ஹெட்செட்டுக‌ளும் ஐபாடுக‌ளும் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌ நாட்க‌ளில்,நிறைய‌ ம‌னித‌ர்க‌ள் வாசிக்க‌ கிடைத்தார்க‌ள்.க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர்க‌ள்,பெண்க‌ள்,குழ‌ந்தைக‌ள்,பிச்சைக்கார‌ர்க‌ள் என‌ எல்லா த‌ர‌ப்பு ம‌க்க‌ளோடும் தோளோடு தோள் உர‌சி ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருக்கிறேன்.ச‌ர்வ‌கால‌மும் செய்தித்தாளை பிரித்து வைத்து கொண்டு,ஆளும் அர‌சையே குறை கூறிக் கொண்டு வ‌ரும் சாமான்ய‌ர்க‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்.ஒருநாள் கிரிக்கெட் போட்டி ந‌ட‌க்கும் நாட்க‌ளில் ம‌ட்டும் சேப்பாக்க‌ம் ச‌ந்திப்பில் மைதான‌த்தில் நிர‌ம்பியிருக்கும் ப‌ர‌ப‌ர‌ப்பை சன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.க‌ல்லூரி நாட்க‌ளில் ந‌ண்ப‌ர்க‌ளோடு ரயில் பெட்டியின் வாச‌லில் நின்று,முக‌த்தில் மோதும் காற்றை சுவாசித்திருக்கிறேன்.ம‌ழையை ர‌சித்திருக்கிறேன்.கூவ‌ங்க‌ளை க‌ட‌ந்திருக்கிறேன்.

இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய‌..நீங்க‌ளும் எழுதுலாமே.இய‌ந்திர‌ம‌ய‌மான‌ ந‌க‌ர‌ வாழ்வினூடே அன்றாட‌ம் நீங்க‌ள் அனுபவிக்கும் சுவார‌ஸிய‌ங்க‌ளைப் ப‌ற்றி !!

**************

கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்

$
0
0
கணிசமான தொகைக்கு இந்த வருடம் புத்தக சந்தையில் அள்ளியாகி விட்டது.வழக்கம் போலவே,வாங்க வேண்டும் என்ற நினைத்த பட்டியல் வேறு.புத்தக சந்தையில் நுழைந்த பின் உருவான பட்டியல் வேறு.மற்றபடி,அபிமான எழுத்தாளர்களான யுவன்சந்திரசேகர்,கோபி கிருஷ்ணன் இவர்களின் புத்தகங்களை வாங்க தவறவில்லை.நண்பர்கள் கேட்ட,பரிந்துரைத்த சில புத்தகங்கள் நிறைய கிடைக்கவில்லை.ஒவ்வொரு நாளும் பதிவுலக நண்பர்களை விழாவில் சந்தித்தது சுவாரஸியமான அனுபவம்.கிழக்கு வெளியீட்டில், ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு புத்தகத்தை அண்ணன் அப்துல்லா வாங்கி கையெழுத்திட்டு அன்பளித்தார்.

பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை அச்சில் பார்த்ததும் ஏற்பட்ட பரவசம் சொல்லில் அடங்காது.

-------------

ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.

என‌க்கு முன் பாயில் ச‌ம்ம‌ண‌மிட்டு அம‌ர்ந்திருந்த ஒரு பெண்ம‌ணி,எக்க‌ச்ச‌க்க‌ ஒப்ப‌னையில்,க‌விஞ‌ர் சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் உரையில் லயித்திருந்தார்.லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு.பிறகு,நேர‌ம் செல்ல‌ செல்ல எல்லா க‌வனச்சிதறல்களையும், தேநீர் பிஸ்கட் கேக் போன்ற வஸ்துக்களின் வாசனைகளையும் த‌ன் பேச்சு ஆளுமையால் சுகுமார‌ன் முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார்.

ஒரு மீசைக்கார‌ க‌விஞ‌னின் ப‌டைப்பு தான் த‌ன்னை முத‌ன் முத‌லில் புர‌ட்டிப் போட்ட‌தாக‌வும்,அதுவே தான் எழுத வ‌ந்த‌மைக்கு முழுமுத‌ற்கார‌ண‌மும் என்று சொன்னார்.எழுத‌ வ‌ந்த‌ கால‌த்தில் க‌வியுல‌கில் அப்போது க‌ர‌காட்ட‌ம் ஆடிக் கொண்டிருந்த பிச்ச‌மூர்த்தி,த‌ர்மு சிவ‌ராமு,பிர‌மிள் இவ‌ர்க‌ளின் பாணி த‌ன்னுள் வராம‌ல் இருக்க பெருஞ்சிரத்தை எடுத்துக் கொண்ட‌தாக‌வும் தெரிவித்தார்.எழுத்தாள‌ர் பாஸ்க‌ர் ச‌க்தியும்,ஞானியும் புன்முறுவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

ச‌ரியாக ஐந்த‌ரை ம‌ணிக்கு ந‌ண்ப‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு இட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.மொழிபெய‌ர்ப்பு குறித்து கிருஷ்ண‌பிர‌பு கேட்ட‌போது,அதில் இருக்கும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை சுகுமார‌ன் எடுத்துரைக்க ஆர‌ம்பித்தார்.ம‌லையாள‌ எழுத்தாள‌ர் ப‌ஷீரின் க‌தைக‌ளை த‌மிழில் மொழிபெய‌ர்த்தல் எவ்வ‌ளவு ரிஸ்க் ஆன‌ காரிய‌ம் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து."எண்ட உப்பப்பாட்ட ஒரு ஆன உண்டு" குறுநாவலை "என் தந்தையிடம் ஒரு யானை இருந்தது" என்று ஒருவர் தவறாக மொழிபெயர்த்த கதையையும் கூறினார்.இருந்தாலும் குள‌ச்ச‌ல் யூசுப்பின் மீது என‌க்கு ந‌ம்பிக்கையிருக்கிற‌து."உல‌கப்புக‌ழ் பெற்ற‌ மூக்கு" வாங்கி வைத்திருக்கிறேன்.பார்ப்போம்.

அர‌சிய‌ல் சார்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌,க‌விதை இய‌க்க‌மான "வான‌ம்பாடி" குறித்து நிறைய‌ ச‌ர்ச்சைக‌ள் எழுந்த‌ன.பிற‌கு அந்த‌ ச‌ர்ச்சை,பெண் க‌விஞ‌ர்க‌ளான‌ ச‌ல்மா,குட்டி ரேவ‌தி,மால‌தி மைத்ரிக்கு தாவியது.ஞாநி,சென்ஷேன‌லைஸ் செய்வ‌து மீடியா தான் என்று வாதிட்டார்.பிற‌கு,கவிதை புரித‌ல் குறித்து நானும் என் ப‌ங்குக்கு ஒரு கேள்வி கேட்டேன்.சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.

ராகுகால கூட்டம் என்ற பெயர் மாறி,இச்சந்திப்பு இன்று ஒரு பிடிவாத கூட்டமாக அமைந்திருக்கிறது.புத்தக கண்காட்சி போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய கூட்டம் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது என‌வும் சில நாட்களுக்கு முன்னர் தான்,இதய அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும் பிடிவாதமாக இம்மாத கேணி சந்திப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று வெற்றிகரமாக நடத்திய ஞாநி அவர்களுக்கும்,கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் பாஸ்கர் சக்தி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம்.

*******

மனப்பிறழ்வு.காம் சில குறிப்புகள் பாகம்-1

$
0
0


முடிவுகளை நோக்கி பயணிக்காத கதைகள் தரும் சுதந்திரம் அளப்பரியது.ஒழுங்கின்மையும் சீரமைக்காத வார்த்தைகளும் வரையறைகளுக்கு இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்க‌ வல்லவை.அதை ஏன் கதை என்று சொல்ல வேண்டும்.எழுதப்போவது கதை என்றாலே அங்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.நாவல் என்று வைத்து கொள்வோமோ ? குறுநாவல்,ஒரு பக்க கதை,தொடர்கதை எதுவும் வேண்டாம்.வரையறைகளே வேண்டாம்.வரையறை என்ற சொல்லாடல் வரும் போது தான் அங்கு மேற்சொன்ன கட்டுப்பாடுகளும் விதிகளும் இலவச இணைப்புகளாக வந்து விடுகின்றனவே.இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.ஒரு விதிக்கு ஆங்கில நாட்டவரின் பெயர் வைத்தால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.தானாகவே அந்த விதிக்கு ஒரு வசீகரம் கூடிவிடுகிறது.)பொன்னுசாமி விதி,குப்புசாமி விதி என்று சொல்லிப்பாருங்கள்.சகிக்கவில்லை தானே ?

இதே கோட்பாடு "டேனிய‌ல் விதி" என‌க்கும் ஒரு பெண்ணுக்குமான‌ உற‌வில் ஏற்ப‌ட்ட‌ நிலையைத் தான் சொல்ல‌ நினைக்கிறேன்.முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்.

என‌து சுய‌ம், க‌ன‌வு, தோல்விக‌ள் ஏற்ப‌டுத்திய ர‌ண‌ங்கள்,போலியான‌ ச‌மூக‌ க‌ட்ட‌மைப்புக‌ளின் மீதிருந்த அதிருப்தி என‌ என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அப‌த்த‌ங்க‌ளுக்கும் அவ‌ளிட‌ம் ஒரு ப‌தில் இருந்த‌து.இந்த விஷயத்தில் மட்டும் சிக்ம‌ண்ட் ஃபிராய்ட் அநியாய‌த்திற்கு விழித்துக் கொள்கிறார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவு ப‌டுத்திக் கொண்டே இருக்கிறார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஏதோ ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றதை கொண்டாட‌ச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.இருக்க‌ட்டும் இருக்க‌ட்டும்.பிற‌கு கவனிக்கிறேன் அவரை.

இப்ப‌குதியை எழுத ஆர‌ம்பித்த‌ போது வித்தியாச‌மான சில‌ குறிப்புகளைக் கொண்டு அவ‌ளைச் சொல்வ‌தென‌ தீர்மானித்தேன்.ஒரு கோர்வையாக‌ எழுத வ‌ராம‌ல் குறிப்புக‌ள் அனைத்தும் பிற‌ழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ சித‌றிக் கிட‌க்கிற‌து.அவ‌ற்றிற்கு ந‌ம்ப‌ர்க‌ள் கொடுத்து ஒரு வ‌ரைய‌றைக்குள்......ம‌ன்னிக்க‌வும்..ஏதோ ஒரு முறையில் த‌ந்திருக்கிறேன்.பாருங்க‌ள்.

--------

உறவுக‌ளை வ‌ரைய‌றுத்த‌ல் அபத்த‌மான‌து என்ற கொள்கை ஆழ்ம‌ன‌தின் வ‌க்கிர‌ங்க‌ளை ச‌மன் செய்யும் ந‌வீன‌ சித்தாந்த‌மாக‌ இருவ‌ரும் ஏற்றுக் கொண்டோம்.

காத‌ல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைக‌ள் வ‌ழ‌க்கொழிந்த‌ சொற்களாகி விட்ட‌ நிலையில்,உட‌ல் ப‌ற்றிய‌ பிர‌க்ஞையே இல்லாம‌ல் அவ‌ளோடு ப‌ழ‌க முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல‌ முடியாது.

எத்தனை முறை முயன்றும் அவளுக்கான இந்த முதல் பத்தியை சிறப்பாக எழுதிவிட முடியவில்லை.எந்த வரிகளாலும் அவளை நிரப்பி விட முடியாதோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிற‌து.எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.

உட‌ல் தின்று உயிர் வாழும் வ‌ல்லூறுக‌ளின் ந‌க‌ங்க‌ள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வ‌ரைய‌றை இல்லாத‌ உற‌வுமுறை இருவ‌ருக்குமே பிடித்திருந்த‌து.

தீவிர அவதானிப்புடன் எழுதப்பட்ட புனைகதைக்குள் வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.

க‌ட‌ற்காக‌ங்க‌ளும் வ‌ல்லூறுக‌ளும் ந‌ண்டுக‌ளும் மீன்க‌ளும் அன்றைய‌ தின‌த்தின் புனித அறிக்கைகளை செவ்வானத்திடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த ர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட ஒரு அந்தி வேளையில்,இர‌வுப்ப‌ணிக்காக‌ பெள‌ர்ண‌மி நில‌வு முழு வீச்சில் ஆய‌த்த‌மாகிக் கொண்டிருந்த‌து.

அன்று Sigmund Freud கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே விழித்திருந்தார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவுப‌டுத்திக் கொண்டே இருந்தார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.

இடைவெளிகளை நிரப்புவதில் அவளுக்கும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும்.

பெளர்ணமி நாளின் நிலவின் குளிர்ச்சியும்,அவள் அருகாமை ஏற்படுத்திய உஷ்ணமும் ஒரு சேர அனுபவிக்கும் தருணங்கள் எத்தனை கொடுமையானது என்று அலைகளைச் சபித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் என்மீது கடற்கரை மணலைத் தூவி விளையாடி கொண்டிருந்தாள்.

என்கிரிப்டட் கவிதைகளை டிசைஃபர் செய்யும் உத்திகளை பழகிக் கொண்டிருக்கிறேன்.காலப்போக்கில் நிறைய புலப்பட்டு விடும்.

அவள் சுயமைதுனச் சித்திரங்களின் ஒரு கிளையாக எனது விரல்களும் நீட்சியடைந்திருக்கக்கூடும்.

எம்மை சோதனைகளில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து ரட்சித்தருளும்.

நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அது ஒரு சிக்கலான மதிப்பீடு.

*********

நெப்பந்தஸ்

$
0
0


"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****

நானோ பிரபஞ்சத்தில் பேரிடி

$
0
0
இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.

http://padhivarkalanjiyam.blogspot.com/

முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்
களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.

சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,

http://writervisa.blogspot.com/2010/01/8.html

---------

எங்கே செல்லும் இந்த பாதை-9

வ‌தை 1:

வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.

லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.."

"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.

இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?

***

வ‌தை 2:

ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.

மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.

"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?

***


போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.

போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.

எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!


***

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!

"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.

லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.

டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20 ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே. ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?!

ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து. பாஸ்க‌ர் மாய‌ம்.

டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

***

போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌ டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.

"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"


( தொடரும் )

-----------------------------------------------

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.

---

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )

$
0
0

முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்

$
0
0
ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்
புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்
முன்னிர‌வே டெம்போவில்
வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌
ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.

தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்
"தூணோர‌மா உக்காந்திருக்க‌
ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"
ப‌த்தாம‌ போகுமோண்டு
ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும்
ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.

வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா.

இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !


********

புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்

$
0
0
போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று
ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.

வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.

தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.

சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.

த‌மிழினி:

சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்
நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்

கிழக்கு:

காஷ்மீர் பா.ராக‌வ‌ன்
ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்

உயிர்மை:

க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்
எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா
ம‌ண்பூத‌ம் வாமுகோமு

காலச்சுவடு:

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்
பாத்துமாவின் ஆடு பஷீர்
மதில்கள் பஷீர்
ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி
ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி அ.முத்துலிங்க‌ம்
கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா

வ‌ம்சி:

உரையாட‌லினி அய்ய‌னார்
க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா

கலீஃபாக்கள் வரலாறு
இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்
இஸ்லாமும் பெண்களும்

********************

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

$
0
0
---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்

$
0
0

ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல் செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.




கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே.

உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.

நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.

ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.

இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும் நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?


*****************

எப்போதுமிருக்கும் ஒருநாள்

$
0
0


பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.

பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில் முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌ உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.

பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.

மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.

ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.

பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.

அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.


------

வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.

*****************
Viewing all 28 articles
Browse latest View live